Thursday 20 June 2013

பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அச்சுறுத்தல் கடிதம்!

பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அச்சுறுத்தல் கடிதம்! - விக்கிலீக்ஸ்




போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தில் "விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்" என அச்சுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].
 
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு,
ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
சுப்பு ராஜ்

Monday 17 June 2013

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:

ஜெயலலிதா முதல்வராக இருப்பதால் இலங்கைக்கு ஆபத்து- சொல்கிறார் கோத்தபாயா:





கொழும்பு: தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கை தொடர்பாக எடுத்து வரும் நிலைப்பாடு காரணமாக இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது என்று இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவின் தம்பி கோத்தபாயா ராஜபக்சே கூறியுள்ளார். இதுகுறித்து கொழும்பில் உள்ள கோத்தேல்வாலா பாதுகாப்பு பல்கலைக்கழத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது - இலங்கை தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள நிலைப்பாடும், கொள்கைகளும், எங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும், இறையாண்மைக்கு ஆபத்தாகவும் உள்ளது. இலங்கையி்ல் என்ன நடக்கிறது என்று இந்தியாவுக்கு நன்றாக தெரியும். இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில், தமிழகத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக அங்கு தேர்தல் நடக்கும்போதெல்லாம் இங்குள்ள மக்களை வைத்து அரசியல் செய்கிறார்கள். சமீபத்தில் கூட சர்வதேச அளவில் இலங்கையை தனிமைப்படுத்த இந்திய அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. தமிழகத்தின் பெரும் பகுதியினர், இலங்கைக்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் நிலைப்பாடு, அவரது பேச்சு, அவரது கொள்கைகள், இலங்கையின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு ஆபத்தாக உள்ளது. இலங்கையில் உள்ள சில தமிழர்கள், தங்களது சக தமிழர்களை விட தமிழகத்து தமிழர்களிடம் அதிக நெருக்கம் காட்டுகின்றனர். பாசம் காட்டுகின்றனர். சில வெளிநாட்டு கட்சிகளுடன் கை கோர்த்து் கொண்டு, அகண்ட தமிழ் தேசம் அமைக்க முற்படுகின்றனர். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இலங்கைக்கு வெளியே குறிப்பாக தமிழகத்தில் இருந்தபடி இலங்கைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதை மிகப் பெரிய மிரட்டலாக நாங்கள் கருதுகிறோம். இலங்கை கடல் பகுதிக்குள் தொடர்ந்து தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றனர். இவர்கள் போதை மருந்து கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத காரியங்களில் ஈடுபடுகிறார்கள். இதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும் என்று பேசியுள்ளார் கோத்தபாயா ராஜபக்சே

இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்

இப்போதைக்கு தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட முடியாது: கர்நாடக முதல்வர்



பெங்களூர்: தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு தான் எதிராக இல்லை என்றும், ஆனால் தண்ணீர் திறந்துவிட தற்போதைக்கு வாய்ப்பில்லை என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஹராங்கி, கபினி, ஹேமாவதி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் குறைந்தபட்ச அளவை விட குறைவாகத் தான் தண்ணீர் உள்ளது. தண்ணீர் பிரச்சனை பெரிதாகி உள்ளது. வரும் மாதங்களில் பெங்களூர் மக்களுக்கு தண்ணீர் வழங்கவே அரசு சிரமப்படலாம். தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுவதற்கு நான் எதிராக இல்லை. ஆனால் தற்போதைக்கு தண்ணீர் திறந்துவிடும் வாய்ப்பில்லை. எங்கள் மாநிலத்திலேயே குடிநீர் தட்டுப்பாடாக இருக்கையில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஜூன் மாதத்தின் முதல் 20 நாட்களில் தமிழகத்திற்கு எப்படி 1.2 டிஎம்சி தண்ணீர் திறந்துவிட முடியும்? கர்நாடகத்தின் பிரச்சனையை தமிழகம் புரிந்து கொண்டு தண்ணீர் கேட்டு வலியுறுத்தாமல் இருக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நல்ல பலனை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் முடிவுகளை கர்நாடகம் ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழக அரசு கூறுவது போன்று நாங்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் பின்பற்றுகிறோம் என்றார்.

 ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்:







சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தே.மு.தி.க. வேட்பாளராக அக்கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் போட்டியிடுவதாக கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். உடனடியாக இளங்கோவன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். ராஜ்யசபாவிற்கு தமிழகத்தில் இருந்து 6 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், அ.தி.மு.கவின் 4 பேரின் வெற்றியும், அதிமுக ஆதரவுடன் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் டி.ராஜாவின் வெற்றியும் உறுதியான நிலையில், மேலும் ஒருவரின் வெற்றி தான் கேள்விக்குறியாக உள்ளது. இந்த இடத்துக்கு தி.மு.க. சார்பில் தற்போது ராஜ்யசபா எம்.பியாக இருக்கும் கனிமொழி வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். தேமுதிக போட்டியிடாவிட்டால் கனிமொழிக்கு வெற்றி சாத்தியம் என்ற நிலையில், தே.மு.தி.க சார்பில் கட்சியின் தலைமை நிலையப் பொறுப்பாளரும் பொருளாளருமான ஏ.ஆர். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதை கட்சித் தலைவர் விஜயகாந்த்தே அறிவித்து விட்டார். இதையடுத்து இளங்கோவன் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். ஏ.ஆர். இளங்கோவன் சேலத்தை அடுத்த ஆத்தூரைச் சேர்ந்தவர். 20 வருடமான விஜய்காந்தின் மன்றத்தில் இருக்கும் இவர் டூவீலர் மெக்கானிக்காக இருந்தவர். படித்தது மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே. ஆனாலும் தேமுதிகவின் பொருளாளராக உள்ளார். 

இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!

இதயத்தைப் பிசையும் மணிவண்ணனின் கடைசி குரல்!  



இங்கே நீங்கள் படிப்பது, இயக்குநர்- நடிகர்-சமூகப் போராளி அமரர் மணிவண்ணன், தன் மரணத்துக்கு சில தினங்கள் முன்பு ஒரு பண்பலை வானொலியில் தன் குரு பாரதிராஜாவுக்கு செலுத்திய மரியாதை இது. கண்களைப் பனிக்க வைக்கும் மணிவண்ணனின் அந்த கடைசி குரல்... "இன்றைக்கு மணிவண்ணன் என்கிற ஒரு திரைப்பட இயக்குநர் என்கிற அடையாளம் தந்தது, எனது குருநாதர், என் ஆசான், நான் இப்போதும் போற்றும் இயக்குநர் பாரதிராஜாதான். அவர் இல்லாமல் இருந்திருந்தால், என் வாழ்க்கை எங்கேயோ திசைமாறிப் போயிருக்கும். நான் சொன்ன ‘நிழல்கள்' என்கிற கதையைக் கேட்டு சிலாகித்துப் போய் அதையே தன்னுடைய அடுத்த படத்துக்கான கதையாக முடிவு செய்து அந்தப்படத்துக்கு வசனமும் எழுதும் வாய்ப்பையும் எனக்கு தந்தார்கள். ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அப்போது பாரதிராஜா அவர்களுடைய நண்பர்கள் "சொன்னா கேட்கமாட்ட எவனோ ஒருத்தன் கோயம்புத்தூர்ல இருந்து கண்ணாடி, ஜிப்பா போட்டுட்டு வந்தான். அவனை ஒரு பெரிய அறிவாளியா நெனச்சிக்கிட்டு நீ வந்து இந்தப்படத்தை எடுத்து, இதுவரைக்கும் பெயிலியரே கொடுக்காத... நீ இப்போ ஒரு பெயிலியர் கொடுத்து, உன் பேரை கெடுத்துட்ட பாத்தியா... சக்சஸ் குடுக்கலே"ன்னு சொன்னாங்க. அப்போ அவரு சொன்னாரு.., நான் வந்து இதே மணிவண்ணனை வெச்சு ஒரு சூப்பர் ஹிட் கொடுக்குறேனா? இல்லையான்னு பாருங்கன்னு சொல்லி, மணி உன்ன நம்பி அவனுங்ககிட்ட நான் வார்த்தை கொடுத்துட்டேன். நீதான் பொறுப்பு.. அந்தக்கதையை நீ எப்படி எழுதுவியோ எனக்கு தெரியாது, உனக்கு ஒரு பத்து நாள் டைம் தர்றேன்னு சொன்னாரு. அதுக்கப்புறம் நான் எழுதின படம்தான் ‘அலைகள் ஓய்வதில்லை'. அந்தப்படம் தமிழக அரசினுடைய 9 விருதுகளை பெற்றுத் தந்தது. அதில் சிறந்த கதையாசிரியர் மற்றும் சிறந்த உரையாடல் ஆசிரியருக்கான இரண்டு விருதுகளை நான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களிடத்தில் இருந்து பெற்றேன். இன்றைக்கும் அரசியல் ரீதியாக, சில சொந்த விறுப்பு,வெறுப்புகளில் நான் விலகி இருந்தாலும் கூட - அம்மா அப்பாக்கிட்ட சண்டை போடுறதில்லையா அந்த மாதிரி தான்... - அவரை வந்து நான் எப்போதும் என்னுடைய இரண்டாவது தாய், இரண்டாவது தந்தை என்று தான் நினைக்கிறேன். அவரைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு என்னை அறியாமல் எனக்குள் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். அந்த நன்றி உணர்வு தான் இன்றைக்கு எனக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறது என்று கூட நம்புகிறேன். என் நேசத்துக்குரிய ஆசான் அப்பா வணக்கம், இன்னைக்கு உங்களுடைய ஆசீர்வாதத்தால, உங்களுடைய அரவணைப்பால நான் சிறந்த நிலையில இருக்கேன். எனக்கு நீங்க தான் கல்யாணம் பண்ணி வெச்சீங்க.., நேத்து மாதிரி இருக்கு, இன்னைக்கு என் மகளுக்கும் திருமணம் ஆயிடுச்சி, என் மகனுக்கும் ஆகப்போகுது, நாட்கள் வேகமாக நகர்ந்துடுச்சு. எவ்ளோ பெரிய டைரக்டரா இருந்தாலும், எத்தனையோ பேர் நம்மளை சிலாகித்து பேசினாலும் அப்பா சத்தியமா சொல்றேன் நான் எப்பவும் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான்.( கண்ணீர் விட்டு அழுகிறார் மணிவண்ணன்...) நான் பாரதிராஜாவோட அசிஸ்டெண்ட் தான், என்மேல ஏதாவது கோபம் இருந்தா என்னை ஒரு அறை விட்டுருங்க; தயவுசெய்து பேசாம மட்டும் இருக்காதீங்க.., ப்ளீஸ்... ப்ளீஸ்பா...." - மெல்லக் கரைகிறது மணிவண்ணனின் குரல். நீரால் நிறைகின்றன கண்கள்! ஆனால், இதற்கு பாரதிராஜா ஆனந்த விகடனில் மணிவண்ணன் குறித்து கடுமையான கருத்துக்களுடன் பதில் பேட்டி தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.